ஸ்ரீநகர்

காஷ்மீர் பிரிவினை வாதத்தலைவர் சையது அலி ஷா கிலானி உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தியதற்காக குடும்பத்தினர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள பண்டிபோரா மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி ஷா கிலானி. காஷ்மீரைத் தனி நாடாக உருவாக்கும் கொள்கையுடன் உள்ள பல்வேறு பிரிவினைவாத இயக்கங்களில் கிலானி அங்கம் வகித்துள்ளார். பிறகு, தெஹ்ரீக் – இ – ஹுரியத் என்ற பிரிவினைவாத அமைப்பை உருவாக்கி நடத்தி வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாகத் தேச விரோத நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், உடல்நலக்குறைவால் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். இதையொட்டி அசம்பாவித சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக காஷ்மீரில் இணைய தளம் மற்றும் செல்போன் சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த கிலானியின் உடல் மீது அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் கொடியைப் போர்த்திய தாகவும், இறுதிச்சடங்கின் போது தேசத்துக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் கூறப் படுகிறது.

இது பெரும் சர்ச்சையானது,  எனவே இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சையது அலி ஷா கிலானியின் குடும்ப உறுப்பினர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.