சென்னை:

ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ‘‘காந்தாள் நாட்கள்’’ கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் இன்குலாபுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘‘கசாக்கிண்ட இதிகாசம்’’ எனும் நூலை, ‘கசாக்கின் இதிகாசம்’ எனத் தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ளார்.

இந்த நிலையில், கவிஞர் இன்குலாபின் குடும்பம் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுத்துவிட்டது. இதுதொடர்பாக அவர் மகள் ஆமீனா சாகித்ய அகாடமியின் இயக்குநருக்குக் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘கவிஞர் இன்குலாப் குரலற்றவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அறியப்பட்டவர்.

அவருக்கான அங்கீகாரம் என்பது மக்கள் கவிஞர் என்பதாகவே இருக்கும். அரசு அளிக்கும் இதுபோன்ற அங்கீகாரங்களை அவரை தேசிய அளவில் கொண்டு சேர்க்கும். ஆனால் அவர் தன் வாழ்நாளில் அரசு வழங்கிய எந்த விருதையும் ஏற்றுக்கொண்டதில்லை.

அரசின் முகங்கள் மாறியிருக்கலாம். ஆனால், அது ஒரே முகமூடியையே அணிந்திருக்கிறது. இன்றையச் சூழலில் வன்முறைகள் ஊக்கமாக நடக்கின்றன. அதேபோல் வகுப்புவாதம், மதவாதம் மற்றும் ஒடுக்குதல் போன்றவையும் நடக்கின்றன.

கவிஞர் இன்குலாபின் படைப்புகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. அதுவே ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். அவரது கருத்துகளுக்கு மதிப்பளித்து இந்த விருதை ஏற்றுக் கொள்வதில்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார். இதன் மீது இன்னும் இறுதி எடுக்கப்படவில்லை.