டெல்லி: மத்திய அரசின் ரோஜ்கர் மேளா  திட்டத்தின் கீழ் இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 3வது கட்டமாக இன்று நாடு முழுவதும் 71ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பிரதமர் மோடி, ரோஜ்கார் மேளா என்ற திட்டத்தை  கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இதன்மூலம் ஒன்றரை ஆண்டுக்குள் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில்  காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுத்து வருகிறார்.  அதைத்தொடர்ந்து, யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி. எனப்படும் சரக பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின்டி இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், இன்று 3வது கட்டமாக,  மத்தியஅரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று முற்பகலில் வழங்கினார்.

இந்த பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து  காணொலி காட்சி மூலம் இன்று வழங்கினார். பின்னர் பணி நியமன ஆணை பெற்றவர் களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

இன்று புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் மத்திய அரசின் கீழ் இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர், தட்டச்சர், இளநிலை கணக்காளர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூக பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளில் சேருகிறார்கள்.

மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ரோஸ்கர் மேளா’ நமது நல்லாட்சியின் அடையாளமாக மாறியுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று என்று கூறியதுடன்,  தொடர்ந்து வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உள்கட்டமைப்பு வளர்ச்சியால், வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன- வணிக உலகில், ‘நுகர்வோர் எப்போதும் சரியானவர்’ என்று சொல்லப்படுகிறது. அதேபோல், ‘குடிமகன் எப்போதும் சரியானவர்’ என்பதே ஆட்சியின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கு உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய நடவடிக்கையே இந்த வேலை வாய்ப்பு திட்டமாகும். இது இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்புக்கு உந்துதலாக அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.