சென்னை:  தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை 12ந்தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தையும் திறந்து வைக்கிறார். கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக,  பிரதமரின் நேரடி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு மேலும் 1450 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளள விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சிமருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா வரும் 12ந்தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி நேரடியாக கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்து வைக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால்,  பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட பிரதமர் அலுவலகம்  செய்திக்குறிப்பில், “பிரதமர் மோடி, தமிழ்நாடு முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னை யில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.  சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் சுமார் 2145 கோடி ரூபாய் மத்திய அரசாலும் மீதி தமிழக அரசாலும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்திய பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் மற்றும் செம்மொழிகளை மேம்படுத்தவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (CICT) புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது.  இந்த புதிய வளாகம் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் 24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த CICT, இனி புதிய 3 மாடி வளாகத்தில் செயல்படும். புதிய வளாகத்தில் விசாலமான நூலகம், மின் நூலகம், கருத்தரங்கு அரங்குகள் மற்றும் மல்டிமீடியா அரங்கம் ஆகியவை உள்ளன.

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான CICT ஆனது தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தனித்துவத்தை நிலைநிறுத்த ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு செம்மொழித் தமிழை மேம்படுத்துவதில் பங்காற்றி வருகிறது. உலகெங்கிலும் செம்மொழியான தமிழை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தப் புதிய வளாகம் திறமையான பணிச்சூழலை வழங்கவுள்ளது.

இதனிடையே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும், தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை யும் வரும் ஜனவரி 12-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மூலம் பிரதமர் மோடியின் தமிழக வருகை ரத்து என்பது உறுதியாகியுள்ளது.