டெல்லி:  நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க பஞ்சாப் சென்ற பிரதமரின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளானது கடுமையான விமர்சனங்களை எழுப்பிய நிலை யில்,  மத்திய, மாநில அரசுகளின் விசாரணைக்குழுக்கள் விசாரணை நடத்த வாய்மொழியாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பிரதமரின் பாதுகாப்பு விவகாரம் என்பது   ஒரு மாநிலத்தின்  சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாக கருத முடியாது. இது தேசிய பாதுகாப்பு அம்சங்களோடு இது தொடர்புடையது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட  பாதுகாப்பு குறைபாட்டில், விவசாயிகளின் சாலை மறியல் காரணமாக, பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநில அரசின் திட்டமிட்ட செயல் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை வீசி வருகின்றன.

இந்த நிலையில், Lawyer’s Voice என்ற தன்னார்வ அமைப்பு, பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அது தாக்கல் செய்திருந்த மனுவில், “பிரதமர் பாதுகாப்பு விவகாரத்தில் அம்மாநில அரசும், தலைமைச் செயலாளரும் பொறுபேற்க வேண்டும். பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருக்கும் காணொளி காட்சி அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் உயரிய அரசியலமைப்புப்  பதவியில் இருக்கும் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. தனக்கான பொறுப்பைத் தட்டிக் கழித்த தலைமைச் செயலாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.  இந்த விவகாரம் ஒரு மாநிலத்தின் பொதுவாக நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாக கருத முடியாது. தேசிய பாதுகாப்பு அம்சங்களோடு இது தொடர்புடையது.  இந்த பாதுகாப்பு விதிமீறல் குறித்து விசாரிக் பஞ்சாப் மாநில அரசு  அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காண்ட், ஹிமால் கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிரதமரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட  சம்பவம் சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பஞ்சாப் மாநிலஅரசு சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் டி.எஸ்.பட்வாலியா, பஞ்சாப்அரசு இந்த விவகாரத்தை மிகத்தீவிரமாக எடுத்துக்கொண் டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க  சம்பவம் நடந்த அன்றே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மாநில அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது என்று கூறினார்.

இதையடுத்து வாதாடிய துஷார் மேத்தா, இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில்  விட்டுவிட முடியாது என்றும், இது எல்லை தாண்டிய பயங்கரவாத விவகாரம் என்றும், எனவே என்ஐஏ அதிகாரி விசாரணைக்கு உதவலாம் என்றும் வலியுறுத்தினார்.

வழக்கில், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் ஆஜராகி வாதங்களை பதிவு செய்தார். அப்போது,  பிரதமரின் பாதுகாப்பு  கேள்விக்குறியானது குறித்து  பஞ்சாப் அரசு அமைத்த விசாரணைக் குழுவில் உள்ள பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.  பஞ்சாப் அரசு  முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில், “உள்துறை முதன்மை செயலாளர்,  அனுராக் வர்மா ஆகியோரைக்  கொண்டு விசாரணை குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில் மீது ஏற்கனவே ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், உள்துறை முதன்மை செயலாளர் இந்த  பாதுகாப்பு குறைபாட்டுக்கு நேரடி பொறுப்புடையவர். எனவே, இந்த குழுவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். ஒரு நாட்டு  பிரதமரின் பயணத் திட்டம் போது கடைபிடிக்கப்பட்ட  விதிமுறைகள், பாதுகாப்பு மற்றும் அவசர காலத்திற்கான திட்டம், சாலை வழியாக செல்லும்போது மேற்கொள்ளப்பட்ட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும்,  பிரதமர் மோடியின் பயணத்தின் போது பஞ்சாப் அரசு எந்த பொறுப்பையும் தட்டிக் கழிக்க வில்லை என்றும் தெரிவித்தார்.  அதே சமயம், மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த மூன்று பேர் கொண்ட குழுவையும் அவர் கேள்விக்கு உட்படுத்தினார்.  நாட்டின் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு சிறப்பு பாதுகாப்புக் குழுவுக்கு உண்டு. அப்படி இருக்கையில், அதன் ஐ ஜி எஸ் சுரேஷ் குமார் மூன்று பேர் குழுவில் இடம் பிடித்துள்ளார். இது, முழுமையான நியதிக்கு வழிவகுக்காது என்றும் தெரிவித்தார்.

இதற்குப்பதிலளித்த, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, “மூன்று பேர் கொண்ட குழுவில் ஐஜி எஸ்/சுரேஷ்குமாருக்குப் பதிலாக மத்திய உள்துறை செயலாளரை நியமிக்கலாம் என்றார்.

அனைத்து, வாதங்கையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிரதமரின் பஞ்சாப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து  ஆவணங்களையும் பாதகாத்து வைத்துக் கொள்ள பஞ்சாப் மற்றும் சண்டிகர் உயார்நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் பஞ்சாப் காவல்துறை, சிறப்பு பாதுகாப்பு குழு, மற்றும் பிற மத்திய மற்றும் மாநில அரசு முகமைகள் அவருக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அமைத்துள்ள விசாரணைக்குழுக்கள்,  வரும் திங்கட்கிழமை வரை தங்கள் பணிகளை நிறுத்தி வைக்குமாறு  வாய்வழியாக கேட்டுக் கொண்டது.