வாரணாசி: பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியல் உள்ள அவரது தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, அதை ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் 7கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை என விளம்பரம் வெளியிட்ட பலே கில்லாடிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தை மர்ம நபர் போட்டோ எடுத்து, அதை ஆன்லைன் விற்பனைத் தளமான ஓஎல்எஸ்ஸ் இணையதளத்தில், 7கோடியே, 50லட்சம்  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என, விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிரதமரின் அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர் உள்பட 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். விளம்பரத்தை பதிவிட்ட நபரின் அடையாளத்தை கொண்டு, நடத்தப்பட்ட விசாரணையில், தவறான ஐடி கொடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக லட்சுமிகாந்த் ஓஹா, அமித்குமார் பதக்,  உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என வாரணாசி எஸ்எஸ்பி தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, அந்த விளம்பரத்தை தனது தளத்தில் இருந்து ஓஎல்எக்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம்,  குஜராத் மாநிலத்தில், நர்மதை நதிக்கரையோரம்  அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான 597 அடி உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகள் கட்டவும், மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவை ஈடுகட்டுவதற்காகவும், சுகாதார உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இந்த சிலை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஒஎல்எக்ஸ் வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.