டில்லி

சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.

இன்று இந்தியாவின் 74 ஆம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்று டில்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கோடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.   இன்று கொரோனா நடவடிக்கை காரணமாக விழா எளிமையாக நடைபெறுகிறது.   இன்று வழக்கத்துக்கு மாறாக முப்படை அணிவகுப்பு, கலை நிகழ்வுகள், அரசுத்துறை சாதனை வாகன அணிவகுப்பு உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தனது உரையில், “இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து. நமது நாடு சுதந்திரம் அடையப் பாடுபட்டவர்களை மனப்பூர்வமாக நாம் நினைவில் கொள்ளவேண்டும். நமது நாடு  சுதந்திரமடைய தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்களைச் சுதந்திர வேட்கையோடு நினைவு கூறவேண்டும்.

பொதுவாக இளைஞர்கள் 20 வயது ஆனாலே சொந்தக் காலில் நிற்க வேண்டும் எனப் பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள்.

நமது நாடு சுதந்திரம் பெற்று 74  ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இந்தியா சொந்தக் காலில் நிற்க வேண்டும்.  நாடு தற்போது சுயசார்பு இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.  இந்தியாவின் பங்கு உலக பொருளாதாரத்தில் அதிகரிக்க வேண்டும்.  நாம் பொருளாதார வளர்ச்சியுடன், மனிதத் தன்மையும் மையமாக வைத்துச் செயல்பட வேண்டும்.

பல மொழிகள் பேசுவோர், பல பிராந்தியங்களிலும் ஒற்றுமையாகப் போராடியதால் தான் சுதந்திரம் பெற முடிந்தது.  இந்தியா உலகை வழிநடத்தக் கூடிய இடத்தில் வர வேண்டும். நமது விவசாயத் துறையின் கட்டமைப்பை தரமுயர்த்த வேண்டியுள்ளது. இந்தியாவின் விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.   ஆகவே விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

இந்திய நாட்டின் எந்த ஒரு பகுதியும் பின்தங்கி விடக்கூடாது. நமக்கு முன்பு பல்வேறு சவால்கள் உள்ளன  நம்மிடம் அவற்றை தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம் உள்ளது.  முன்பு நம்மிடம் வெண்டிலேட்டர் இல்லாமல் இருந்தன  ஆனால். தற்போது அவற்றை நாம் தயாரிக்கிறோம். இனி நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம் உள்ளூர் தயாரிப்புக்குக் குரல் கொடுப்போம் என்பதே ஆகும்.

உலக நாடுகள் இந்தியாவை இன்று நம்பிக்கையுடன் பார்க்கின்றன. கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான சோதனைகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.  வெகு விரைவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் முன் களப்பணியாளர்களை நாம் நினைவு கொள்ள வேண்டும்.   பல்வேறு இடங்களில் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் போர்க்களமாக உள்ளது.  நாம் தொடர்ந்து மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.  அவ்வகையில் நாம் கொரோனாவுக்கு  எதிரான போரிலும் நிச்சயம் வெல்வோம். “ எனத் தெரிவித்துள்ளார்.