டெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்ட இன்று பூமிபூஜை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கலந்துகொண்டு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டுகிறார்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், இதை இடித்து விட்டு புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு,  ரூ.861.90 கோடி செலவில்  64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது.

‘இதற்கான பூமி பூஜை  இன்று ( டிசம்பர் 10ம் தேதி) நடைபெறும் சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்கனவே அறிவித்தார். மேலும், . பிரதமர் மோடி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற  நீதிபதிகள், புதிய நாடாளுமன்றம் கட்ட தடை விதித்துள்ளனர். அதே நேரம், பூமி பூஜைக்கு தடை விதிக்கவில்லை. இந்நிலையில் திட்டமிட்டபடி  இன்று பூமி பூஜை நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி பூமி பூஜையையும் நடத்தி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். சில மாநிலங்களின் கவர்னர்கள், முதல்வர்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.

புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும்பணி  2022-ம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதே ஆண்டில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்குள் புதிய பாராளுமன்றம் தயாராகி விடும் என்று தெரிகிறது.

இந்த கட்டிடம் கட்டுவதற்கான டெண்டரை  டாடா நிறுவனம் பெற்றுள்ளது.

புதிய கட்டிடத்தில், மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் இருக்கும். மேலும், பாராளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இ அத்துடன்  நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம்,  எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.