ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கவாதி நடத்தினான். இந்த தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வீரர்கள் மீது தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயர் ஆதில் அகமது தார் என்றும் அவர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த தாக்குதலுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார். அவரது பதிவில், “புல்வாமா சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவானது, கோழைத்தனமானது, இந்த தாக்குதலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். நம் தீரமான வீர்ர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீணாகாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் தோள் கொடுப்பார்கள். காயமடைந்த வீரர்கள் வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கண்டன செய்தியில், “சிஆர்பிஎப் ஜவான்களின் உயிர்களைக் குடித்த பயங்கரவாதத் தாக்குதல் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. கடுமையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய சோகமான தருணத்தில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கிறோம், அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்” என்று கூறியுள்ளது.