கொல்கத்தா:

தேர்தல் களத்தை சூடாகவே வைத்திருந்த மேற்கு வங்கத்தில், ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமை இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம்  நிறைவு பெற்றது.


பிரதமர் மோடி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இடையேயான வார்த்தை மோதல்கள், சவால்கள் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

அமித்ஷா பேரணியில் ஏற்பட்ட கலவரத்தின்போது உடைக்கப்பட்ட சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் பிரம்மாண்ட பஞ்சலோக சிலை அமைக்கப்படும் என மோடி அறிவித்தார். இறுதி கட்ட பிரச்சாரத்தில் பேசிய மோடி, மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார்.

நான் நினைத்தால் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றுவேன் என்று மம்தா கூறியதற்கு பதில் அளித்த மோடி, நிலத்தை ஆக்கிரமிப்பது மம்தா வழக்கம் என்றார்.

மம்தா மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், மம்தாவை தோற்கடிக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே மக்கள் இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

இதற்கிடையே, தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மம்தா, வித்யாசாகர் சிலை அமைக்க மோடி போடும் பிச்சை எங்களுக்கு தேவையில்லை என்று காட்டமாக கூறினார்.

மேற்கு வங்கம் ஏழை மாநிலமாகிவிட்டதாக சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு மம்தா கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது.
வெள்ளிக்கிழமையுடன் முடிய வேண்டிய தேர்தல் பிரச்சாரத்தை, அமித்ஷா கூட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ஒரு நாள் முன்னதாக முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.