டில்லி

ன்று பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று விட்டு வழியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல உள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் இந்தியப் பிரதமர் மோடியை பிரான்ஸ் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு, 2 நாள் பயணமாகப் பிரதமர் மோடி இன்று  பிரான்ஸ் செல்கிறார்.

நாளை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி, அணிவகுப்பு நடக்கிறது. பிரதமர் மோடி அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.  அங்கு இந்திய முப்படைகள் குழுவும் அணிவகுப்பில் பங்கேற்கிறது.

மேலும் பிரான்ஸ் அதிபர் மெக்ரோனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது இந்தியா-பிரான்ஸ் ராணுவ உறவின் 25-வது ஆண்டு  என்பதால் கலாச்சாரம், அறிவியல், பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

வரும் 15 ஆம் தேதி பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு செல்கிறார்.அங்கு  ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயத் அல் நயானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இருவரும் எரிசக்தி, கல்வி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, நிதிநுட்பம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் விரிவான ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகம் ஜி-20 மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் பேசுகிறார்கள்.   இதை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.