லக்னோ:
விவசாயிகளை அழிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு தான் ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று அஜித் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவவுள்ளது. இதையொட்டி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராஷ்டிரிய லோக் தள கட்சி தலைவர் அஜித் சிங் பிரச்சாரத்தில் பேசியதாவது:-

ரூ. 500, 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கை விவசாயிகளுக்கும், சாதாரண மக்களுக்கும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் கொள்கைகள் அனைத்தும் இந்திய விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. விவசாயிகளை அழிக்க மோடி திட்டமிட்டு செயல்படுகிறார்.
முதலில் அவர் வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை கொண்டு வருகிறேன் என்ற கூறியதை நிறைவேற்றத் தவறிவிட்டார். பிறகு ரூ.500, 1000 பயன்பாட்டை நீக்கினார். தற்போது கோதுமை இறக்குமதி தீர்வையை ரத்து செய்து நம் நாட்டு விவசாயிகளை அழிக்க முயல்கிறார்.
விவசாயிகளை வகுப்புவாத ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சி செய்தும், வகுப்பு வாத பதட்டத்தை உருவாக்கி தேர்தலில் பலன் அடைய மோடி திட்டமிட்டுள்ளார். இதற்கெல்லாம் பதிலடி பாஜ.வை தோற்கடிப்பதே ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஐக்கிய ஜனதா தள தலைவர்க்ள் சரத் யாதவ், கே.சி. தியாகி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.