டெல்லி: பிரதான் மந்திரி  கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

2022 ஆம் ஆண்டு வரை இலவச ரேஷன் வழங்கும் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பவளியான தகவலில், இலவச அரிசி, கோதுமை திட்டம் நவம்பர் 30ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதுஅடுத்த ஆண்டு மார்ச் வரை  நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் காலத்தில் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.  தொடக்கத்தில் 3 மாதங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்த இலவச திட்டம், கொரோனா தொற்று கட்டுக்குள் வராத நிலையில், மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதால், நவம்பருடன், இலவச ரேசன் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில்,  பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் சில மாதங்கள் நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, இந்த திட்டம் 2022ஆம் ஆண்டு மார்ச் வரையிலும் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், அதனப்டி, ஏழைகளுக்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் வரை இலவசமாக ரேஷன் கிடைக்கும் எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்து உள்ளார்.