நீட் தேர்வு தோல்வி காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தையின் மரணம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

நீட் எனும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மூன்று நான்கு ஆண்டுகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து லட்சக்கணக்கில் செலவு செய்தால் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்க முடியும் அல்லது கோடிக்கணக்கான ரூபாயை கட்டணமாக கொடுத்து தனியார் கல்லூரிகளில் பயில முடியும் என்ற நிலையால் மருத்துவ படிப்பு வசதி படைத்த மாணவர்களுக்கானதாக உருவாக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றும் இடமாக மாறியுள்ள ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே சென்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பிய நிலையிலும் நீட் விலக்குக்கு கையெழுத்துப் போட மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் ஆளுநர்.

இந்த நிலையில் நீட் உயிரிழப்புகள் தொடர்வதை அடுத்து மாணவர்களுக்கு இதுபோன்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்.

‘கையெழுத்து போடமாட்டேன்’ என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்.

மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மறைவுக்கும் எனது ஆழமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்களது மரணமே, நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும்.

அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்ந்து காட்டுங்கள். பிறரையும் வாழ வையுங்கள்.

உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.