சென்னை:

மிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை முழுமையாக செயல்படுத்தும் நோக்கில், பிரபலமான உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், பிஸ்கட் மற்றும் சாக்லெட் நிறுவனங்களுக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவின் பால், பிஸ்கட் பாக்கெட்டுகள், மசாலா பொருட்கள்  போன்ற உணவு பொருட்கள் அடைக்கப்பட்டு வரும் பொருட்களுக்கு  தடை கிடையாது என்றும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடை செய்யும் நோக்கில்,  சாக்லெட், பிஸ்கட் போன்ற சாப்பிடும் பொருட்கள், உணவுக்கு தேவையான  மசாலா பொருட்கள், அழகு சாதன  பொருட்கள் அடைக்கப் பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நெஸ்ட்லே, பிரிட்டானியா, டாபர் இந்தியா, பெப்சி போன்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யும்  பெருநிறுவனங்கள்,  மசாலா பொருட்கள் நிறுவனங்களான ஆச்சி, சக்தி, ஜிபிசூர், டிரிபிள்7 உள்பட ஏராளமான  நிறுவனங்கள், ஆவின், அமுல், ஹட்சன்  போன்ற பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட  95 நிறுவனங்களுக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதன்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்  தங்களது பொருட்களை தமிழகத்தில் சந்தைப்படுத்த வேண்டுமெனில், தமிழ்நாட்டின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்திட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது

மேலும், அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட பொருட்களை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பவும், பெருநிறுவன பொருட்களை கொண்ட கவர்களை அந்தந்த நிறுவனங்களே சேகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறத்தி உள்ளது.