டெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க பிளாஸ்மா தெரபி உதவாது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் குறையாமல் உள்ளது. உலகளவில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.

நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. கொரோனாவை ஒழிக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மற்ற நாடுகளை போன்று இந்தியாவும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.

இந் நிலையில், கொரோனா நோயாளிகள் இறப்பைக் குறைக்க பிளாஸ்மா சிகிச்சை உதவவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் ஒரு ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 14 மருத்துவமனைகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. 39 மருத்துவமனைகளில் 464 பேரிடம் பிளாஸ்மா சிகிச்சை செயல்திறன் குறித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் முடிவுகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டு உள்ளது.

2 குழுக்களாக்க ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வுகளின் படி, கொரோனா  உயிரிழப்புகள் பிளாஸ்மா சிகிச்சை முறையில் குறையாது என்பதும்  தெரிய வந்துள்ளது.