புதுடெல்லி:

பெரும்பாலான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு வானிலை காரணமல்ல, பைலட்கள் பற்றாக்குறையே காரணம் என்று தெரியவந்துள்ளது.

வானிலை பாதிப்பால் விமான போக்குவரத்து தடைபட்டதாகக் கூறி 75-க்கும் மேற்பட்ட விமானங்களை கடந்த வாரமும், திங்கள் அன்று மட்டும் 32 விமானங்களையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் ரத்து செய்தது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு வானிலை காரணமல்ல என்று தெரியவந்துள்ளது. பைலட்கள் பற்றாக்குறையே விமான சேவை ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவனத்துக்கு தற்போது 30% பைலட்கள் பற்றாக்குறை உள்ளது. குறைந்தது 100 பைலட்டுகள் இருந்தால் மட்டுமே விமான சேவையை தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பைலட்களின் பணி நேரம் மாதம் ஒன்றுக்கு 125 மணி நேரம் ஆகும் ஆனால் வழக்கத்தைவிட 100 மணி நேரம் அதிகமாக பணியாற்ற பைலட்களை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்பந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக உடல் வலி மற்றும் மனரீதியாக பெரும்பாலான பைலட்டுகள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் பணிக்கு செல்லுமாறு பைலட்டுகள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் பணியிலிருந்து விலகிவிட்டனர்.

பைலட்கள் மாதம் 70 மணி நேரம் மட்டுமே பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அவர்களை 110 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.