சென்னை; திருச்சி சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், தற்போது,   ரூ.3 கோடியில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான  ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் நடைபெறும் பல பகுதிகளில் முறையான  மைதானம் இல்லாத நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, ஜல்லிக்கட்டு மைதானங்களை தமிழ்நாடு அரசு கட்டி வருகிற்து.

அதன்படி, திருச்சி மாவட்டம் சூரியுரில்   மாட்டு பொங்கல் தினத்தன்று  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இதற்கு பெரும் வரவேற்பு உண்டு. இந்த ஜல்லிக்கட்டில்,   திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்பர்.

இந்த ஆண்டு சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை அமைச்சர் அன்பில் மகேஸ் விழா குழுவினரிடம் வழங்கினார்.

அதன்படி, திருச்சி பெரிய சூரியூரில் ரூ.3 கோடி செலவில் இந்த ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக இது அமையும்  என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு ஸ்டேடியும் அமைப்பதற்கான மின்- டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். அதில், “திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் கிராமத்தில் முதலமைச்சர் மினி விளையாட்டு அரங்கம் – ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கு பிப்ரவரி 04 மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தம் வழங்கி தளத்தை ஒப்படைத்த நாளிலிருந்து 270 நாட்களில் பணியை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி சூரியூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு! ஸ்டேடியம் அமைக்க அரசாணை வெளியீடு!!