“தேர்தலில் நிற்க நிரந்தர தடை” தேவையில்லாத ஒரு ஆணி ..

சிறப்பு கட்டுரை:

முத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்….

ரு ஜனநாயக நாட்டில் தேர்தல் தொடர்பாக, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்கள் கொண்டு வருவது என்பது மிகவும் அவசியம்.

சுதந்தரத்திற்கு பின் அதன்படியே ந தேர்தல் சீர்திருத்தங்கள் தேவைப்படும்போதெல்லாம் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், குறிப்பிடத்தக்கவை என்று சொல்லக்கூடியவை, வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடுவது கட்டாயம்,

மக்கள் பிரதிநிதி ஒருவர் 2 ஆண்டு மற்றும் அதற்கு மேல்  சிறை தண்டனை பெற்றால் உடனடி பதவி பறிப்பு மற்றும் தண்டனைக் காலம் முடிந்தும் ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது போன்றவை.

அதே நேரத்தில் சீர்திருத்தங்கள் அடிப்படையையே ஆட்டிப்படைகிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே பேராபத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு,  கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே சம்பந்தப்பட்டவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

ஆளும் அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு அரசியல் எதிரி மீதும் ஒரு கிரிமினல் வழக்கை தொடுக்க வைத்து  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட முடியும் என்பதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அத்தோடு அந்த திருத்த கோரிக்கையும் காணாமல் போனது.

இப்போது அதனுடைய பரிணாம வளர்ச்சி போல் அடுத்த வில்லங்கம் முளைத்துள்ளது.

கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் என  தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க நிரந்தரமாக தடை விதிக்கக்கோரும் வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அஸ்வின் குமார் என்பவர் தொடுத்துள்ள வழக்கை விசாரித்து தான் மூன்று வார கால அவகாசம் தந்து உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு பியூன் கூட மீண்டும் பணியில் சேர முடியாத இந்த நாட்டில்தான், கிரிமினல் குற்றத்துக்காக தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தேர்தலில் போட்டியிட்டு சட்டத்தையே உருவாக்கும் இடத்திற்கு வந்து விடுகிறார்கள்” என்று வாதிட்டுள்ளார் மனுதாரருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்.

ஒரு 17 வயது இளைஞன் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டால் மைனர் என்ற ஒரே காரணத்திற்காக அவனுக்கு  மூன்றாண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும். அவன் மூன்றாண்டு சிறை அனுபவித்து விட்டு ஆறு ஆண்டுகள் கழித்து தேர்தல் விதிப்படி அவன் 26 வயதில் போட்டியிட்டு சட்டம் இயற்றும் இடத்திற்கே வந்து விட முடியும்?

இதெல்லாம் என்ன மாதிரியான வழிவகைகள் என்பதும் வழக்கறிஞர் விகாஸின்  கேள்வியாக உள்ளன.

வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான மன்மோகன், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் சிலர் தங்களது மனைவிகளை முதலமைச்சர்கள் ஆக்கி ரிமோட் கண்ட்ரோல் போல் செயல்படுவதையும்   பார்த்திருக்கிறோம் என்றும்கருத்து தெரிவித்திருக்கிறார்.

இவ்விவகாரத்தில் தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி என்ன சொல்கிறார் என்றால், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது போல தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும் என்று.

இந்த வழக்கின் கோரிக்கையை பார்க்கும் போது ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நினைவுபடுத்தி  பார்த்தாலே போதும், விபரீதம் புரியவரும்.

2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில்  தேர்தல்  பிரச்சாரத்தின் போது மோடி என்ற வார்த்தையை பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி சில கருத்துக்களை தெரிவித்தார்..

கர்நாடகாவில் பேசிய பேச்சுக்கு குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவசரமாக அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கிறது.

உடனே அவரின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிறது அவர் போட்டியிட்டு வந்த வயநாடு கேரளாவின் வயநாடு தொகுதி காலியான சபாநாயகர் அறிவிக்கிறார். 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியின் எம்பிக்கான குடியிருப்பு காலி செய்ய வைக்கப்படுகிறது.

பின்னர் விவகாரம் உச்ச நீதிமன்றத்திடம் செல்கிறது

“அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் போதுமான காரணங்களையும், முகாந்திரங்களையும் சூரத்  நீதிமன்றம் கூறவில்லை,” என்று உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிவாரணம் கிடைத்ததன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆனார்.

140 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நாட்டில் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கே, மின்னல் வேகத்தில் பதவி பறிக்கப்பட்டு தேர்தலிலேயே போட்டியிட முடியாத அளவுக்கு வெகு வேகமாக நீதிமன்றம் மூலம் ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுகிறது என்றால் சாமான்ய, நேர்மையான எதற்கும் வளைந்து கொடுக்காத அரசியல்வாதிகளின் நிலைமை என்னவாகும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே இந்த நாட்டில் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் ‘செயல்பாடு’ என்ற வகையில் அவ்வப்போது கடுமையான விமர்சனங்களுக்கு தப்பவில்லை.

ஒரு அமைச்சருக்கு எதிராக முடிந்த விட்ட வழக்கில், வழக்கு நடந்த விதம் விடுதலை செய்யப்பட்ட விதம்  தனக்கு தூக்கத்தை கெடுக்கிறது என்று சொல்லி ஒரு நீதிபதி  தன்னிச்சையாக அதே  வழக்கை எடுத்து மீண்டும் விசாரித்து தீர்ப்பு சொல்ல அமைச்சரின் பதவியே அடுத்த வினாடி போனது .

பதவி பறிக்கப்பட்டவர் பின்னர்  மேல்முறையீட்டில் பரிகாரம் பெற்று வந்து சில மாதங்களிலேயே மீண்டும் அமைச்சரானார சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லையா?

மக்களாட்சி தத்துவத்தில் மக்கள் பிரதிநிதிகள் என்கிற இடத்திற்கு நல்லவர்களும் வருவார்கள் கெட்டவர்களும் வருவார்கள்.

அதே நேரத்தில் கெட்டவர்களுக்கான வழிகளை அடைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு,  பழிவாங்கும் அரசியல் மேலோங்கி வரும் காலகட்டத்தில் நல்லவர்களுக்கான வழியையும் சேர்த்து அடைத்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.

கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் சட்டம் இயற்றும் இடத்திற்கு வரக்கூடாது என எதிர்பார்ப்பது நல்ல விஷயம்தான்.

ஆனால் தண்டிக்கப்படுபவர்கள் அனைவருமே  நேர்மையாகவும் நியாயத்தின் படியும் தண்டிக்கப்படுவார்களா என்பது தான் இங்கே கேள்வி குறி..

அதனால், குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்கள் நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என்ற யோசனை நல்ல பலனை விட அதிகமான எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.