இம்பால்

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில காவல்துறையினருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்புப்படை வீரர்களும் அங்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காகப் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சுராசந்த்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினர் சீருடையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேர் சிக்கியதால் அவர்களைக் கைது செய்து  உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.  கைது செய்யப்பட்ட 5 பேரும் தன்னார்வலர்கள் என்றும் எதிர் தரப்பினரிடம் இருந்து தங்கள் கிராமத்தைப் பாதுகாத்து வந்தனர் என்றும் கூறி கிராம மக்கள் அவர்களது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி 5-க்கும் மேற்பட்ட அமைப்புகள் 48 மணி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.  நேற்று முன்தினம் இரவு முதல் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

மாநிலம் எங்கும் கடைகள், வணிக வளாகங்கள், பெரும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வணிகங்களும் மூடப்பட்டதால் மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  முழு அடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.