சிங்கரய கொண்டா,.  ஆந்திரா

பீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் சிக்கிய போது அங்கிருந்தோர் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது.  அதில் பீர் பாட்டில்கள் ஏற்றப்பட்டிருந்தன.  இந்த லாரி பிரகாசம் மாவட்டம் சிங்கரய கொண்டா அருகே விபத்தில் சிக்கியது.

லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் சாலையில் சிதறின.  இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு ஓடி வந்து பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர்.   பைகளிலும் தங்களது வேட்டி, லுங்கி சட்டைகளிலும் பீர் பாட்டில்களை அள்ளிக் கொண்டு சென்றுள்ளனர். 

அத்துடன் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் அளித்தனர்.  அங்கு அவர்களும் வந்து  பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர்.  ஒரு சிலர் எடுத்துச் சென்ற பீர் பாட்டில்களை வீட்டில் வைத்து விட்டு மீண்டும் மீண்டும் வந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்துள்ளனர்.  சாலையில் ஏராளமான பீர் பாட்டில்கள் உடைந்து கிடந்துள்ளன. அவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி உள்ளனர்.   மொத்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பீர் பாட்டில்கள் அள்ளிச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.