சென்னை

நாளை  புரட்டாசி மாதம் தொடங்குவதால் காசிமேட்டில் ஏராளமானோர் மீன் வாக்க வந்துள்ளனர்.

சென்னை காசிமேட்டில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் 1200க்கு மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களும் இங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காசிமேடு மீன் சந்தையில் எப்போதுமே விடுமுறை தினத்தன்று அதிக அளவிலான மக்கள் மீன்கள் வாங்குவதற்காகக் குவிந்து வருவார்கள். மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதுடன் இது ஆவணி மாதத்தின் கடைசி நாளாகும்.  நாளை புரட்டாசி மாதம் தொடங்குகிறது.

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவைத் தவிர்ப்பார்கள். எனவே ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிட முடியாது என்பதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும்  காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க அதிகாலை முதலே மக்கள் குவிந்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இன்று மீன்களின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.  அதாவது  வஞ்சிரம் ரூ.500. வவ்வால் ரூ350, சங்கரா ரூ.300, இறால் ரூ.250, கடமா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.