டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 3 நபர் குழு விசாரணை குழு அறிக்கை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், மத்தியஅரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்யாததால், உச்சநீதி மன்றமே, இந்த  விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான 3 பேர் குழுவை அமைத்திருந்தது.

இஸ்ரேல் நாட்டைச்சேர்ந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட பலரது தொலை பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த உளவு மென்பொருளைக் கொண்டு,  அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 முக்கிய நபர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. கடந்த விசாரணை களின்போது,  பெகாசஸ் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில், மத்திய அரசு சொந்த மக்களைக் கண்காணித்ததா, இல்லையா என்பதை மட்டும் தெரிந்துகொள்ள இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், மத்தியஅரசு அதுகுறித்து தெரிவிக்க மறுத்து விட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்தியஅரசு சார்பில் எந்தவித உத்தரவாதமும் வழங்காத நிலையில், இன்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தது. அதன்படி, பெகாசஸ் விவகாரத்தில்  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழுவின் மற்ற உறுப்பினர்களாக  அலோக் ஜோஷி மற்றும் சந்தீப் ஓபராய் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த குழு பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. ஏற்கனவே கடந்த பிரப்ரவரி மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. அதுகுறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் மேலும் அவகாசத்தை வழங்கியது. இதைத்தொடர்ந்து, 3 நபர் குழு விசாரணை முடிவடைந்த நிலையில், பெகாசஸ் விசாரணை அறிக்கையை இன்று உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.  பெகாசஸ் வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே கருத்து தெரிவித்த தலைமைநீதிபதி என்.வி.ரமணா,  பெகாசஸ்  விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக்கியமானவை.மக்களின் அந்தரங்க உரிமையை செல்போன் ஒட்டுகேட்புப் பாதிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனிமனித உரிமைகளும் முக்கியம். இந்தியர்களின் ரகசியத்தை காப்பது முக்கியம். பத்திரிக்கையாளர் மட்டுமின்றி அனைத்து குடிமக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குடிமக்களின் அந்தரங்க உரிமைக்கு வயது வரம்பு  விதிக்க முடியும். அந்தரங்க உரிமைக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறுவதாக இருக்கக் கூடாது என கூறியது குறிப்பிடத்தக்கது.