நேபாளம்:
நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.

நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிருலா, மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாகக் கூறினார்.

“தற்போது கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது,” என்று அவர் கூறினார்.

72 இருக்கைகளைக் கொண்ட பயணிகள் விமானம் போக்கரா சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விமானத்தில் மொத்தம் 68 பயணிகள், 4 பணியாளர்கள் இருந்ததாக காத்மண்டு செய்திகள் தெரிவித்துள்ளது. எட்டி ஏர்லைன்ஸின் இந்த விமானம் பழைய விமான நிலையத்திற்கும் போக்கரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விபத்திற்குள்ளானது.

விமானத்தில் 72 பேர் இருந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளது.

விமான விபத்து நேரிட்டதும் அந்த இடத்தில் புகை மூட்டம் எழும் காட்சிகளை செய்திகள் வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் பரவலாக பலராலும் பகிரப்பட்டு வருகிறது.