நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை நேற்று மாலை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அரோரா வெளியிட்டுள்ளார்.  அவர் அறிவித்துள்ள தேர்தல் தேதிகள்  அனைத்தும் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதமே, பாஜகவின் சமூக வலைதளங்களில் வெளியானது என்பது உறுதியாகி உள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஜூன் மாதம் 3-ந்  தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள்ளாக தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி அமையப்பெற்று 17வது நாடாளுமன்றம் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால், அதற்கான முயற்சிகள் ஏதையும் தேர்தல் ஆணையம் எடுக்காத  நிலையில், பிரதமர் மோடி, மக்களிடையே வாக்குகளை பெறும் நோக்கில், பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வந்தார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் பின்னர் தேர்தல் அறிவிப்புக்கான பணிகளை முடுக்கி விட்ட தேர்தல் ஆணையம், நேற்று தேர்தல் தேதிகளை அறிவித்தது.

ஆனால், அறிவிக்கப்பட்ட தேதிகளும் ஏற்கனவே கடந்த 2 மாதங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தேர்தல் தேதிகள் குறித்த பட்டியலை  ஒட்டியே அமைந்துள்ளது  வியப்பை ஏற்படுத்தி இருப்பது மட்டு மல்லாமல், தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வந்துள்ளது  வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

தி ஏஜ் ஆப் பனானாஸ் என்ற டிவிட்டர் பக்கத்திலே, கடந்த ஜனவரி மாதம் 11ந்தேதி அன்று, பகல் 11,57 மணிக்கு தேர்தல் தேதிக்கான பட்டியல் வெளியிடப் பட்டு உள்ளது. அதில், இந்த தகவல் பாஜகவின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து கிடைத்தாக பதியப் பட்டுள்ளது. பின்னர் அந்த தகவல் நீக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் தேதி குறித்த தகவல் நீக்கப்பட்டாலும், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..  இதை பார்க்கும் மக்கள் இதை  பொய் செய்தி (fake news) என்றே கருதி வந்த நிலையில், தற்போது அந்த  தகவல் உண்மையாகி இருப்பது அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர் கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த தகவலில்   குறிப்பிட்டுள்ளது போல, பீகார், ஒடிசா, மேற்குங்கம், ஜார்கண்ட் உள்பட பல மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் தேதிகள், நேற்று தலைமை தேர்தல் அதிகாரி அரோரா வெளியிட்டுள்ள தேர்தல் தேதிகளை ஒத்தே காணப்படு கின்றன. ஏறக்குறைய ஒருநாள் பின்பு அல்லது ஓரிரு நாள் முன்பு என்ற வகையில் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த ஒற்றுமை எப்படி ஏற்பட்டது. இந்த தகவல்கள் பாஜகவின் சமூக வலைதளங்களில் பரவியது எப்படி? அவர்களுக்கு தேர்தல் தேதி குறித்த ரகசிய தகவல் கிடைத்தது எப்படி என்று பல்வேறு வினாக்கள் எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம், ஆளும் மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வந்துள்ள செயல் தற்போது ஆதாரங்களுடன் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் தன்னாட்சி பெற்ற உயர்ந்த அமைப்புகளில் ஒன்றான இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணையத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற் பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது.

இவ்வளவு உயர்ந்தர அமைப்பான தேர்தல் ஆணையம் மோடி அரசின் பிஸ்கட்டுக்கு வாலாட்டி வந்துள்ள நிகழ்வு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசின் கைக்குள்  தேர்தல் ஆணையம் சிக்கியுள்ளது என்பது ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது.