டில்லி

ச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசுக்கு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது  சட்டம் மற்றும் பணியாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ‘நீதித்துறை நடைமுறைகளும், அதன் சீர்திருத்தங்களும்’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு இது பற்றி அறிக்கை அளித்து இருக்கிறது.

பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி தலைமையிலான இந்த குழுவின் அறிக்கையில்,

”மருத்துவ அறிவியலின் முன்னேற்றம், மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்புக்கு ஏற்ப நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக இந்த குழு கருதுகிறது.  இதற்காக அரசியல் சாசனத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொண்டு  அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும்போது, அவர்களின் உடல் நிலை, வழங்கிய தீர்ப்புகளின் எண்ணிக்கை, அவற்றின் தரம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும். அவ்வகையில் எந்தவொரு நீதிபதியின் பதவிக்காலத்தை உயர்த்துவதற்குப் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பு, உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் ஒரு மதிப்பீட்டு முறையை வகுத்து நடைமுறைப்படுத்தலாம்.

நீதிபதிகளின் ஓய்வுக்குப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் அதிருப்தி வெளியாகி இருக்கிறது.  ஆகவே அரசின் பணத்தில் இருந்து நிதியுதவி செய்யப்படும் எந்த வகையிலான அமைப்புகள் அல்லது நிறுவனங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை பணியமர்த்தும்போது, அவர்களின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்ய வேண்டும்.”

என்று கூறப்பட்டு உள்ளது.