சென்னை:

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு, அவர்களின் பெற்றோர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று உ.பி. மாநில பாரதிய ஜனதா எம்எல்ஏ கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர் கத்துவா சிறுமி மற்றும் உ.பி. உன்னாவ் மாவட்டம் என சிறுமி வன்புணர்வு, கொலை போன்று தொடர் சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக மத்திய அரசுக்கு உலகம் முழுவதும்  அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாலியல் வன்கொடுமைகளை ஒடுக்கும் பொருட்டு, மத்திய அரசு போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ., சுரேந்திர சிங் கூறியதாவது,

நாட்டில்  பலாத்கார குற்றங்கள் அதிகரித்துள்ளதற்கு பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்.  பெண் குழந்தைகளை சுதந்திரம் என்ற பெயரில் கண்டபடி பெற்றோர்கள் அலைய விடுவதால்தான்  இத போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று குற்றம் சாட்டியவர், பெண் குழந்தைகளை  கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றார்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கண்டித்து வளர்க்க வேண்டும் என்றும், அவர்களிடம் செல்போன்களை கொடுக்கக்கூடாது என்றும் கூறியவர், பெண்களை  சுதந்திரமாக விடுவதால்தான் குற்றங்கள் அதிகரிக்கிறது என்று கூறி உளாளர்.

பாஜக எம்எல்ஏவின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.