தெரு நாய் தாக்கியதில் ‘வாஹ் பக்ரி டீ’ நிறுவன நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் காலமானார்

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக தெரு நாய் தாக்குதல் மற்றும் தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் தாக்குவது அதிகரித்து வருகிறது.

இதற்கு வயதானவர்கள், சிறுவர்கள் என்று பலரும் இரையாகி வரும் நிலையில் கட்டுப்பாடின்றி தெருவில் அவிழ்த்துவிடப்படும் பிராணி உரிமையாளர்கள் மீது அபராதம் தவிர வேறு எந்த ஒரு முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ‘வாஹ் பக்ரி டீ’ நிறுவன நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் தெரு நாய் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

அக்டோபர் 15 ம் தேதி மாலை தனது வீட்டு வாசலில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பராக் தேசாய் மீது தெருநாய் ஒன்று தாக்கியதை அடுத்து தவறி விழுந்த தேசாய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (அக். 22) உயிரிழந்தார், அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

ஆண்டுக்கு ரூ. 1500 கோடி வருமானம் ஈட்டும் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கர்களில் ஒருவர் தெருநாய் தாக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.