பழனி

பழனி கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தினந்தோறும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும்.

பழனி கோவிலில் ஆடி கிருத்திகைக்கு ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்பட உள்ளதாகவும், தொலைப்பேசி மூலம் அர்ச்சனைக்கான முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதை நம்பி பலரும் முன்பதிவு செய்ய முயன்றனர்.

ஆனால் பழனி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகைக்கு ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யும் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இப்படி எந்த அறிவிப்பையும் திருக்கோவில் நிர்வாகம் வெளியிடவில்லை எனவும், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பொய்யான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.