தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்த முழுவிவரம் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் தூதர்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரங்கள் மூடப்படுவதாகவும், வாகா அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு உள்ளூர் பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, பயங்கரவாதிகள் ஏகே-47 துப்பாக்கியால் சுமார் 20 நிமிடங்கள் சுட்டனர். உள்ளூர் பயங்கரவாதிகளின் பெயர்கள் அடில் அகமது தாக்கூர் மற்றும் ஆசிப் ஷேக் என்று கூறப்படுகிறது.

ஆதாரங்களின்படி, அடில் தாக்கூர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அடில் குர்ரி பிஜ்பெஹாராவில் வசிப்பவர் என்று கூறப்படுகிறது. ஆசிப் ஷேக்கிற்கு ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆசிஃப் மோங்காமா மிர் மொஹல்லாவில் (டிரால்) வசிப்பவர் என்று கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் சிலர் உடல் கேமராக்களை பொருத்தியிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. தாக்குதல் சம்பவம் முழுவதும் பயங்கரவாதிகளால் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதன்கிழமை ஸ்ரீநகருக்கு கொண்டு வரப்பட்டன, அங்கு அதிகாரிகள் காவல் கட்டுப்பாட்டு அறையில் மலர் அஞ்சலி செலுத்தினர்.