காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா சீசன் உச்சத்தை எட்டிய நிலையில் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை ஒரேநாளில் சீர்குலைந்துள்ளது.

இந்த ஆண்டு சுற்றுலா சீசன் தொடங்கியதில் இருந்து களைகட்டிய சுற்றுலா பயணிகளின் வருகை துலிப் தோட்டம் திறந்த 26 நாட்களில் 8.5 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குளிர்காலத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக வரும் ஆகஸ்ட் மாதம் வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் தங்க சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்தது.

அதேவேளையில், ராம்பனில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து சில பயணங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கண்மூடித்தனமான பயங்கரவாத தாக்குதலால் 26 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து நேற்று முதல் முன்பதிவுகளை ரத்து செய்வது அதிகரித்த நிலையில் இன்று மாலை அநேகமாக அனைத்து 12 லட்சம் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டதாக காஷ்மீர் ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் நேற்று சம்பவம் நடந்த நேரத்தில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்ததாகவும், தற்போது அவர்கள் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வீடு திரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி காஷ்மீரில் இருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லும் விமானங்களில் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இருப்பினும், காஷ்மீர் ஹோட்டல் மற்றும் உணவக சங்க நிர்வாகம் அங்கு சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.