இஸ்லாமாபாத்: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தொடர் கோரிக்கைகளின் எதிரொலியாக, கடந்த மாதம் இந்த குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.

இந் நிலையில், இந்த சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மைத்தன்மையை குறைக்கவோ நீக்கவோ மருந்து தரப்படும்.

இது தொடர்பான முடிவை அரசு நியமித்த மருத்துவர்கள் குழு தீர்மானிக்கும். பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்கவும், 4 மாதங்களில் விசாரணை முடிக்கவும் அவசர சட்டம் வழி வகை செய்கிறது.

இந்த சட்டப்பூர்வமான ஆண்மை நீக்கம் தண்டனை போலந்து, இந்தோனேஷியா, தென்கொரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்களில் ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த நாடுகளின் பட்டியலில் இப்போது பாகிஸ்தானும் இணைந்துள்ளது.