இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி ஆவார். இவர் கடந்த 2008 முதல் 2010 வரை பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தார். இவரது சகோதரி ஃபரியல் தல்பூர் ஆவார். இவர்கள் இருவர் மீதும் வங்கிக் கணக்கு மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டில், ”இவர்கள் இருவரும் இணைந்து பல போலி வங்கிக் கணக்குகள் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் ரூபாய் 15 கோடி வரை வெளிநாட்டுக்கு பண பரிமாற்றம் செய்துள்ளனர். இவை அனைத்தும் ஊழலில் கிடைத்த பணமாகும்” என தெரிவிக்கபட்டுள்ளது.

இதை மறுத்த இருவரும் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளித்தனர். அதை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்தது. அதனால் நேற்று இரவு ஆசிஃப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது சகோதரி தல்பூர் இது வரை கைது செய்யப்படவில்லை.