இஸ்லாம்பாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாடு நாடு செல்ல இம்ரான்கான் தலைமையிலான அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கும் வகையில், வெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இம்ரான்கான் – நவாஸ் ஷெரீப்

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடல்நலம் கருதி, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. தற்போது மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது உடல் நிலையில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல தடை இருப்பதால் அதற்கு அனுமதி கோரி அவரது குடும்பத்தினர் அரசிடம் விண்ணப்பித்தனர்.

அதனை பரிசீலித்த பாகிஸ்தான் அரசு அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உள்ளது.  இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.