இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைதண்டனைப் பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

69 வயதாகும் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமராக சிலமுறைகள் பதவி வகித்தவர். இவருக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் பதவியை இழந்து சிறைசெல்ல நேரிட்டது.

ஆனால், சிறையில் இவரின் உடல்நலன் பாதிக்கப்பட்டது. சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது நிலைமை மோசமடைந்துள்ளதாக அவரின் மருத்துவர் அட்னான் கான் கூறியுள்ளார். ரத்த அணுக்கள் குறைவு, சிறுநீரக பாதிப்பு, நெஞ்சுவலி, சர்க்கரை அளவு குறைவு உள்ளிட்டவைகளால், அவர் உயிருக்குப் போராடி வருவதாக தெரிவித்தார் அவர்.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப் சார்பாக ஜாமீன் கேட்டு, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, அவருக்கு 8 வாரகால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.