கடந்த 1950களில் மும்பை நகரில் அறிமுகமான மிகவும் புகழ்பெற்ற ஃபியட் டாக்ஸி, இந்த 2020ம் ஆண்டில் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது.

வடிவமைப்பு, செயல்திறன் உள்ளிட்ட விஷயங்களில், டிரைவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களின் அபிமானத்தையும் பெரியளவில் பெற்றிருந்தது இந்த டாக்ஸி. தற்போது, இதன் பயன்பாடு முடிவுக்கு வருகிறது.

இந்த டாக்ஸிக்கு ‘பத்மினி டாக்ஸி’ மற்றும் இந்தியில் ‘காலி பீலி’ என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இந்த டாக்ஸியின் தேவை மிகவும் விரும்பப்பட்டது.

இந்த 21ம் நூற்றாண்டிலும்கூட, இந்தியா போன்ற நாட்டில், 1000 மக்களுக்கு 22 கார்கள் என்ற நிலையே உள்ளது. இதனால், பொதுப் போக்குவரத்தின் தேவை நாட்டில் மிக அதிகமாக உள்ளது. அந்தப் பொதுப் போக்குவரத்து என்பதில் டாக்ஸியும் அடக்கம்.

மும்பையின் எல்லைகள் தொடர்ந்து விரிவடையும் சூழலில், அந்தப் போக்குவரத்தில் பல்வேறு டாக்ஸிகளும் இணைகின்றன. இந்நிலையில், இந்த கொரோனா சூழலுக்கு மத்தியில் ‘பத்மினி டாக்ஸி’ யும் தனது பயணத்தை நிறைவு செய்கிறது.