சென்னை:

தன்னை விமர்சித்த பிரதமர் மோடிக்கு திருக்குறளை மேற்கோள் காட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

மோடியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என ப.சிதம்பரம் ட்விட் செய்திருந்தார்.

அதன் விவரம்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தது நினைவிருக்கிறதா? பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 50,000 குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டன என்றும் 5 லட்சம் பேர் வேலையிழந்தனர் என்று கூறியுள்ளனர்.

பணமதிப்பு நீக்கம் செய்த திரு மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.

ஒழுங்காக வரி கட்டி நடந்து கொண்டிருந்த தொழில்களை நசுக்கியது யார்? ஜிஎஸ்டி அடிப்படையில் நல்ல கொள்கை. அதைக்கோமாளித்தனமாக அமல்படுத்தி அந்தச் சட்டத்தைப் பொல்லாத  சட்டமாக மாற்றியது யார்? பணமதிப்பு நீக்கம், கோமாளித்தனமான ஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த திரு மோடி அவர்களே, உங்கள் மடியில் இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ?

பணமதிப்பு நீக்கம் செய்த திரு மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.

இவ்வாறு ப.சிதம்பரம் ட்விட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து திருப்பூர் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தான் ஒருவர் மட்டுமே அறிவாளி என நினைக்கிறார் என ப.சிதம்பரம் குறித்து மறைமுக தாக்கி பேசினார்.

அதனால் தான் அவர்களை தோற்கடித்தார்கள், மீண்டும் மீண்டும் தோற்கடித்துக்கொண்டே இருப்பார்கள் என்றார்.

மனதின் எண்ணத்திற்கு ஏற்றபடி மனிதனின் உயர்வு இருக்கும் என திருவள்ளுவர் கூறியுள்ளார்.

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்ற திருக்குறளுடன் தனது பேச்சை பிரதமர் மோடி முடித்தார்.

இதற்கு சமூக வலைதளம் மூலம் பதில் அளித்த ப.சிதம்பரம், எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்று இன்றைய ஆட்சியாளர்களை கருத்தில் கொண்டு அன்றே திருவள்ளுவர் சொன்னாரோ? என குறிப்பிட்டுள்ளார்.