கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் ஒருவாரம் கெடு விதித்துள்ளது. இல்லையென்றால் ராஜபச்சே அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவரை பதவி விலக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் பதவி விலக மறுத்து வருகிறார். இதையடுத்து, அவர்மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. இதற்கு 120 எம்.பி.க்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினரின் ஆட்சியால் இலங்கை கடுமையான  பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை சமாளிக்க முடியாத நிலையில்,  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் அந்நாட்டு மக்கள் கடந்த 18 நாட்களாக போராடி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம், வீடு ஆகியவற்றை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மேலும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் மகிந்த ராஜபக்சே பதவி விலக மறுத்து வருவதுடன்,  இடைக்கால அரசு அமைந்தாலும் தாமே பிரதமர் என பிடிவாதமாக உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து,  எதிர்க்கட்சிகள்,  மகிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில்  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 120 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இன்னும் ஒரு வாரத்திற்குள் ராஜபக்சே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கெடு விதித்து உள்ளன.

இலங்கை பாராளுமன்றத்துக்கு ஒட்டுமொத்தமாக 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களில், 196 பேர் வாக்களிப்பின் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள்.  பெரும்பான்மை பெற 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால் ராஜபக்சேவுக்கு எதிராக 120க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருப்பதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தால், ராஜபக்சே அரசு கவிழ்வது உறுதி. இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.