டெல்லி: மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி போராட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை, அவர்களின் குரல் நசுக்கப்பட்டது என்று மத்தியஅரசு மீது குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19- ஆம் தேதி தொடங்கி  ஆகஸ்டு 13ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் தொடங்கிய முதல்நாள் முதல் நேற்று (12ந்தேதி வரை) வரை டெலிபோன் ஒட்டுக்கேட்பு  தொடர்பாக பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம், எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.  அமளியின் உச்சபட்சமாக நேற்றுமுன்தினம் (10ந்தேதி) மாநிலங்களவையில் பெஞ்சுமீது ஏறி சத்தம் போட்டனர். இதையடுத்து,  13-ம் தேதியுடன் நிறைவடை இருந்த மழைக்கால கூட்டர் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே அறையில் கூடி ஆலோசனை நடத்தினர். அதில், மத்தியஅரசை கண்டித்து, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிரிக்கட்சிகள் மத்திய அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி பேரணி மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,  மத்தியஅரசு, நாடாளுமன்றத்தில் பெகாசஸ், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்து விட்டது.  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை, அவர்களின் குரல் நசுக்கப்பட்டது / எங்களை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததால் ஊடகங்கள் முன்பு பேசுகிறோம். பல்வேறு பிரச்சனைகள் குறித்து மத்திய அரசு விவாதிக்க மறுத்ததை மக்களிடம் தெரிவிக்கவே இந்த பேரணி என்று கூறினார். மேலும், நாட்டின் ஜநாயகம் படுகொலை செய்யப்படுவதாகவும், நாட்டின் 60% மக்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது, அவமானப்படுத்தப்பட்டுள்ளது  என்று கூறினார்.

எதிர்க்கட்சிகளின் பேரணி குறித்து பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா,  பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறித்து மத்திய அரசு பதிலளிக்கவில்லை இதுவே நாடாளுமன்ற முடக்கத்திற்கு பாஜகவே காரணம் என்றார். எதிர்க்கட்சிகளின் பேரணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த,  திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும்,  சிவசேனா கட்சி உள்ளிட்ட கிட்டத்தட்ட 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.