டில்லி

நாளை முதல் 2 நாட்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூருக்கு செல்ல உள்ளனர்.

கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, அங்கு 2 மாதங்களுக்கும் மேலாகக் கலவரம் நீடித்து வருகிறது.

இதில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் மற்றும் அங்கு பெண்களுக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

நாடாளுமன்றத்தில் இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் மற்றும் இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகின்றன.

மணிப்பூரின் நிலைமையை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவும் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை மற்றும் நாளை மறுநாள் அந்த மாநிலத்துக்குச் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூருக்கு 20-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு செல்ல இருப்பதாகவும், அந்த குழுவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளில் இருந்தும் எம்.பி.க்கள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.