மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3-ம் தேதி முதல் எதிர்கொள்ள தயார் என்று தலைமைத் தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும், ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றெல்லாம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டுகளைக் கூறின. .

இதையடுத்து கடந்த 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியது. இதில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறும் அரசியல் கட்சிகள் அதை நிரூபிக்கலாம், இதனை எதிர்கொள்ள தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சவால் விடுத்திருந்தது.

இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த செயல்முறை விளக்கம் முடிந்தவுடன் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வித குளறுபடியும் செய்ய முடியாது. அவற்றின் இன்டர்னல் சர்க்யூட்டை மாற்றியமைப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய அரசியல் கட்சிகள் இதுவரை தேர்தல் ஆணையத்தில் வலுவான ஆதாரம் ஏதும் அளிக்கவில்லை. இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் விவிபிஏடி கருவி பயன்படுத்தப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3-ம் தேதி முதல் எதிர்கொள்ள தயார்” என அறிவித்தார்.