மேட்டூர்:  மேட்டூர் அருகே உள்ள  அரசு பள்ளி ஒன்றின்  சமையல் அறை மற்றும் பள்ளியின் பூட்டில் மனிதக்கழிவு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், வேங்கை வயல் தொடர்ந்து பல இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளில் மலம் கலக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரங்களில் தமிழநாடு அரசு முறையான நடவடிக்கை எடுக்காததால்,  இந்த வக்கிரமான செயல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

மேட்டூரில் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காவேரிபுரம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  பாரம்பரியம் மிக்க பழமை வாய்ந்த இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் காவல் பாதுகாப்பு இல்லாதது அந்தப்பகுதி மக்களின் பெரும் குறையாக இருந்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி சில குடிமகன்கள் பள்ளி வளாகத்திலேயே மது அருந்திவிட்டு பாட்டில்களை தூக்கிச் வீசும் அவலங்களும் இதற்கு முன்னே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மனித கழிவுகள் வீசப்பட்டு உள்ளது, அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை பள்ளியை திறக்க வந்த ஆசிரியர்கள், பள்ளி பூட்டின் மீதும், சமையல் மீதும் மனித கழிவுகள் வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காலை பள்ளிக்கு வந்த சத்துணவு ஊழியர்கள் மாணவர்களுக்காக உணவு சமைக்க சென்ற பொழுது, அறையின்மீது மனித கழிவுகள் வீசப்பட்டுள்ளதை கண்டு  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கும், கல்வி மேலாண்மை குழுவிற்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் காவல் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது.  ஆனால் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆசிரியர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, இந்த சம்பவம்  ஊடகங்களில்  பரபரப்பாக செய்திகள் வெளியான நிலையில் மேட்டூர் கோட்டாட்சியர், மேட்டூர் காவல்துறையினர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவரும் ஒரே நேரத்தில் வந்து குவிந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மர்ம நபர்கள் சிலர் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கான சத்துணவு கூடத்தின் சுவரில் மனிதக் கழிவுகளை பூசி விட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அண்மையில் திருவள்ளூரில் பள்ளிக் கட்டிடத்தில் பூட்டுகளில் மனித கழிவு பூசப்பட்டது, மேலும் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மேட்டூரில் பள்ளியில் உணவு தயாரிக்கும் கட்டிடத்தில் மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.