டெல்லி:  ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அறிவிக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவின் அறிவிப்பின்படி, கடந்த 10 நாட்களில்  5,000 ஆலோசனைகளை பொதுமக்கள் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இரு முறை கூடி ஆலோசனை நடத்தி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஆலோசனைகள் வழங்கும்படி கேட்டுக்கொண்டது. இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை பெறப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வரும் 15-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என உயர்மட்டக் குழு ஜனவரி 1ந்தேடிதி அறிவிப்பு வெளியிட்டது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் குறித்த சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனைகளை அனுப்பும்படி கூறியிருந்தது. அதன்படி பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அனுப்பிவருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 10 நாளில்,  ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு இதுவரை 5,000 ஆலோசனைகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மத்திய  சட்ட ஆணையத்தின் கருத்தையும் உயர்மட்டக் குழு கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டக் குழுவை மீண்டும் அழைத்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

. பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை https://onoe.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ, se-hlc@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.