புனே

காராஷ்டிர மாநிலம் புனேவில் ஜி பி எஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்து 101 பேர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் ‘கிலான் பாரே சின்ட்ரோம்’ நோய் தொற்று பரவி வருகிறது. இந்த நோய் மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவதால், ‘ஆட்டோ இம்யூன்’ என அழைக்கப்படுகிறது. இது தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அண்மையில் புனே வந்து திரும்பிய சோலாப்பூரை சேர்ந்த 40 வயது நபருக்கு மூச்சுத்திணறல், கீழ் மூட்டுகளில் பலவீனம், உடல் சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டது. எனவே சோலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் முதல்கட்ட சோதனையில் அவர் ஜி.பி.எஸ். நோயால் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது.

அந்த நபரின் உயிரிழப்புக்கான சரியான காரணத்தை அறிய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக சோலாப்பூர் அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சஞ்சய் தாக்குர் கூறினார். அவரின் ரத்த மாதிரி ஆய்வுக்காக புனேயில் உள்ள தேசிய தொற்று நோய் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“புனேயில் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்தது. இதில் 68 பேர் ஆண்கள். 33 பேர் பெண்கள். இவர்களில் 16 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோலாப்பூரை சேர்ந்த ஒருவர் பாதிப்பால் உயிரிழந்து உள்ளார்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொதுமக்களுக்கு ஜிபிஎஸ் பாதிப்பு அசுத்தமான தண்ணீரால்  ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.  மகாராஷ்டிராவுக்குநோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் டாக்டர்கள் குழுவினர்  அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். விரைவில் அவர்கள் புனேயில் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.