சென்னை: அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ – ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், டிசம்பர் 28ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்  நடத்தப்படும் என அறிவித்து உள்ளது.

திருச்சியில்  தனியார் விடுதி ஒன்றில் ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு கூட்டம்  நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின்  மாநில ஒருங்கிணைப்பாளர்கள்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சினை, சமீபத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்த நடவடிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சமீபத்தில் டிபிஐ வளாகத்தில்,  சம வேலைக்குச் சம ஊதியம், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம், ஊதிய முரண்பாடுகளை களைதல், உள்ளிட்டவற்றை அரசு நிறைவேற்றித் தர வேண்டும்” என ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.  சென்னையில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் வந்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அரசு தரப்பில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதன் பிறகு, போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த,  ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான சங்கர் கூறியதாவது, சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டத்தின் போது மிரட்டி, வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டமைக்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.

அரசு ஊழியர் சங்கங்களான ஜாக்டோ-ஜியோ கடந்த 2017ஆம் ஆண்டு முதல்  பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான  தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. ஆனால், கடந்த கால அரசும், தற்போதைய அரசும், இதுவரை எங்களின்  எந்தவொரு கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை.

அதனால், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர் 28 ஆம் தேதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நவம்பர் 1ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், நவம்பர் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பிரச்சார இயக்கமும், நவம்பர் 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் மாதம் 28ஆம் தேதி சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டு தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.

 இந்நிலையில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், நடத்தவிருக்கும் தொடர் போராட்டங்கள் குறித்து அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.