பெங்களூரு:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  மார்ச் 31ந்தேதி தேசத்துக்கு செய்தியாகும் வகையில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று ஜேடிஎஸ் கட்சித்தலைவர் தேவகவுடாவும், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவருமான  சித்தராமையாவும் தெரிவித்து உள்ளனர்.

கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது.  இரு கட்சிகளுக்கு இடையே  தொகுதி உடன்பாடு போடப்பட்டுள்ளது.

அதன்படி மொத்தமுள்ள  28 பாராளுமன்ற தொகுதிகளில்  8 தொகுதி  மதசார்பற்ற ஜனதாதளமும், மீதமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும்  போட்டியிடுகிறது.

இந்த நிலையில் இரு கட்சி தலைவர்களும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, வரும் 31ந்தேதி, இந்த நாடே திரும்பி பார்க்கும் வகையில் பிகப்பெரிய பேரணியை நடத்த இருப்பதாகவும், இதில், இரு கட்சிகளின் தலைவர்களும் பங்குபெறுவார்கள் என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த  இந்த  வரலாற்று சிறப்புமிக்க பேரணி தேசத்துக்கும் ஒரு செய்தியாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இரு கட்சிகளும் தங்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து 28 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தல் சந்திக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.  இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும், வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே களைப்பட்டு விடும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

இந்த பேரணி, கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாக இருக்கும்  என்றும் தெரிவித்து உள்ளனர்.