சேலம்

சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி 16 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது.

பல்வேறு அணிகள் தி.மு.க.வில் இருந்தாலும், இளைஞரணிக்குத் தொண்டர்கள் மத்தியில் முக்கிய இடம் உண்டு. கடந்த 2007 ம் ஆண்டு தி.மு.க. இளைஞர் அணிக்கு முதன் முதலில் முதல் மாநாடு நெல்லையில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டை அன்றைய தி.மு.க இளைஞரணி செயலாளராக இருந்த மு.க.ஸ்டாலின் நடத்தினார்.

மு.க.ஸ்டாலின் வெள்ளை நிற சீருடையில் மிடுக்காகத் திறந்த ஜீப்பில்  சென்றார்.  திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்தபடி பேரணியக் அன்றைய முதல்வர் மறைந்த கருணாநிதி பார்வையிட்டார். அந்த மாநாடு எழுச்சியாக நடந்தது.

பிறகு தி.மு.க. இளைஞரணி சார்பில் மாநாடு எதுவும் நடத்தப்படவில்லை.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்குத் தலைமை ஏற்றதும் அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. இளைஞரணி 2-வது மாநாடு நடத்தப்பட இருக்கிறது.

மாநாட்டுக்காகக் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய நகரங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போது சேலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளுடன் நடக்கும் தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

”கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி தி.மு.க. வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்தியது தி.மு.க. இளைஞரணி முதல் மாநாடு. அதைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி  தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது”.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.