சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒமிக்ரான தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. இதனால், தமிழகத்திலிருந்து ஒமிக்ரான்  மரபணு சோதனை மாதிரி வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதாக மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.  தமிழகத்தில் தொற்று உறுதியாகி மரபணு சோதனை மேற்கொள்வதில் 85 சதவீதம் பேருக்கு ஒமிக்ரானும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா வகையும் உறுதியாகி வருகின்றது. ஒமிக்ரான் பாதிப்பு குறித்து வெளிமாநிலங்களுக்கு சென்று பரிசோதனை  முடிவு வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் குணமடைந்து விடுகின்றனர். இதனால், மரபணு சோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்படுவதை நிறுத்திவிட்டதாக கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில், கோரோனா மற்றும் ஒமிக்ரான்  பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறியே இருப்பதால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர் என்றார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது என்றவர்,  அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை வருவதால், மெகா தடுப்பூசி முகாமை இந்த வாரத்திற்கு பதிலாக அடுத்த வாரம் நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.