திருச்சி: தீபாவளிக்கு மறுதினம் வரும் 25ந்தேதி விடுமுறை விடுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தீபாவளி பண்டிகையையொட்டி 24ந்தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை. ஆனால், தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள், அடுத்த நாளான 25ந்தேதி பணிக்கு வருவது கடினம். அதனால், தீபாவளிக்கு மறுநாளான 25ந்தேதி  அரசு பொதுவிடுமுறை  நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க் கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும்,  இது பள்ளி கல்வித்துறைக்கு மட்டுமின்றி  அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் என்றவர்,  இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் கலந்து ஆலோசித்து முடிவு வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரின் தகவலை பார்க்கும்போது, 25ந்தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.