மும்பை

ரணப் புரளியை கிளப்பிய பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்து விட்டதாகக் கடந்த 2ம் தேதி அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். இதே தகவல் பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிடப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

அடுத்த நாளே தான் இறந்துவிட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்றும், தாம் உயிரோடு இருப்பதாகவும் கூறி பூனம் பாண்டே ஒரு வீடியோ வெளியிட்டார்.

மேலும் அவர்.

“கருப்பை வாய் புற்றுநோய் தாக்கி ஏராளமான பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள். ஆனால் மற்ற வகை புற்றுநோய்களை ஒப்பிடுகையில் கருப்பைவாய் புற்றுநோய் என்பது தடுக்கக்கூடிய நோய்தான்.

உரிய பரிசோதனைகளும், மருத்துவ சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டால் இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியும். உயிரிழப்பைத் தடுத்து நிறுத்தமுடியும். கொஞ்சம் கொஞ்சமாக நம்மைக் கொல்லும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனைச் செய்தேன்” 

என்று வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

இதனால் பூனம் பாண்டேவை ரசிகர்கள் மற்றும் பல நடிகர்-நடிகைகள் கண்டித்து உள்ளனர். மகாராஷ்டிர சட்டமன்ற மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

சட்ட நிபுணர்கள் பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.  தற்போது பூனம் பாண்டேவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை தொடங்கி உள்ளது.

பூனம் பாண்டேவுக்கு கொல்கத்தாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் தனது வழக்குரைஞர் ஷயான் சச்சின் பாசு என்பவர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர் விரைவில் நீதிமன்றத்தில் பூனம் பாண்டே மீது வழக்கு தொடரவும் தயாராகி உள்ளார்.